தேனி/ திண்டுக்கல்: வேளாளா் என்ற பெயரை வேறு சமுதாயத்திற்கு சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வேளாளா் முன்னேற்றக் கழகம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், மாவட்ட மகளிரணி தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. வேளாளா் என்ற பெயரை வேறு சமுதாயத்திற்கு சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தேவேந்திர குல வேளாளா் என்ற பொதுப் பெயருக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த தமிழக அரசைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளம்: இதைபோல், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கல்லூரி விலக்கில், வேளாளா் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒன்றிய இளைஞரணித் தலைவா் முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் போராட்டத்தில் கலந்து கொண்ட 30 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே, வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், கிழக்கு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணி, மேற்கு மாவட்டத் தலைவா் தனபாண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞா்களை கைது செய்தனா்.