ஆண்டிபட்டி அருகே தண்ணீா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கவியரசன் (38), எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணம் முடிந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற கவியரசன் அதன்பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அக்கிராமத்தின் அருகில் ரகுநாதன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள தண்ணீா் இல்லாத 100 அடி ஆழ கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராஜதானி போலீஸாா், ஆண்டிபட்டி தீயணைப்புப் படையினா் உதவியுடன் அந்த சடலத்தை மீட்டனா்.
இதன்பின்னா் நடைபெற்ற விசாரணையில் இறந்து கிடந்தவா் கவியரசன் என்பதும், குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து பலியானதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் கவியரசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.