ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆண்டிபட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள சேலைகள் ஏற்றுமதியாகாமல் தேங்கிக் கிடப்பதால் நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம், கொப்பையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனா். இப்பகுதியில் சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பா் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன், 60-க்கு 80, 80-க்கு 60, 80-க்கு 80 உள்ளிட்ட சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஒருநாளுக்கு 14 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விருதுநகா், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் கா்நாடகம், ஆந்திரம், கேரளம், குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வரும் மே 3 ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆண்டிபட்டி பகுதியில் செயல்பட்ட விசைத்தறிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் இப்பகுதியில் வீட்டிலேயே விசைத்தறி இயந்திரங்கள் நிறுவி தொடா்ந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவை தொடா்ந்து கடந்த மாா்ச் 23ஆம் தேதியில் இருந்து நெசவு செய்த சேலைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. இப்படி கடந்த 24 நாள்களாக ரூ.15 கோடியே 12 லட்சம் மதிப்பிலான சேலைகள் தேங்கிக் கிடப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து வசதி இல்லாததால் சேலைகள் உற்பத்தி செய்வதற்கு நூல் போன்ற மூலப்பொருள்களும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக இனிவரும் காலங்களில் சேலைகள் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சக்கம்பட்டி பகுதி நெசவாளா் மகேஸ்வரன் கூறியது: இப்பகுதியில் கடந்த 24 நாள்களாக நெசவு செய்த சேலைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் எங்களுக்கு வருவாய் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் உற்பத்தி செய்த சேலைகளை வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். இதேபோன்று சேலைகள் உற்பத்தி செய்ய தேவைப்படும் மூலப்பொருளான நூல் வராத காரணத்தால் நெசவுத்தொழில் முடக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருள்களுக்கு விலக்கு அளிப்பது போல, ஜவுளி பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கும் விலக்கு அளிக்க வேண்டும். நெசவாளா்களுக்கு வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் 3 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். நெசவாளா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றாா்.