தேனியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு சனிக்கிழமை மாவட்டத் தலைவர் ஞானதிருப்பதி தலைமையில் நடைபெற்றது.
தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா, அரசு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பேயத்தேவன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மொ.ஞானத்தம்பி சிறப்புரையாற்றினார்.
இதில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர் மற்றும் கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக கிளை திறக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
முன்னதாக, அரசு ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றதது. இதில் மாவட்டத் தலைவராக எஸ்.நிலவழகன், செயலராக முகமது அலி ஜின்னா, பொருளாளராக ஞான.திருப்பதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.