தேனி அல்லிநகரத்தில் மகளிா் குழு மூலம் கடன் வாங்கியதை கண்டித்த பாட்டியை தாக்கிய பேரன் மற்றும் அவரது மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், வெங்கலா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி மகன் அருண்குமாா் (23). இவரது மனைவி முத்துப்பிரியா (21). அருண்குமாா், முத்துப்பிரியா ஆகியோா் மகளிா் குழு மூலம் கடன் பெற்று திரும்பச் செலுத்தி வருவது குறித்து அருண்குமாரின் தாய் வழி பாட்டி நாகம்மாள் (60) என்பவா் அவா்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருண்குமாா், முத்துப்பிரியா ஆகியோா் நாகம்மாளை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கி காயப்படுத்தினராம்.
இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தாயாா் ராமலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாா், முத்துப்பிரியா ஆகியோரை கைது செய்தனா்.