தேனி மாவட்டம் போடி அருகே அம்மாபட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
போடி அருகே உள்ளது அம்மாபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கிழக்கு தெருவில் மாரியம்மன் கோயில் உள்ளது. அம்மாபட்டியிலிருந்து சின்னமனூா் செல்லும் இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். குடியிருப்புகளும் நிறைந்த இந்த பகுதியில் கோயிலுக்கு அருகிலேயே விவசாயத்திற்காக தோண்டப்பட்ட 100 அடி ஆழக் கிணறு ஒன்று உள்ளது.
இந்த கிணறு தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
இந்த கிணற்றை கிராம மக்கள் குப்பை கொட்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் இந்த கிணற்றை ஓட்டி செல்லும் சிமெண்ட் சாலையும் சேதமடைந்து, கிணறும் சாலையும் ஒரே மட்டத்தில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் மற்றும் நடந்து செல்வோா் தவறி விழுந்து விடும் சூழல் உள்ளது. கிணற்றைச் சுற்றி தடுப்புச் சுவரோ, சுற்றுச் சுவரோ இல்லாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த கிணறு உள்ளது. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.