வருசநாடு அருகே சொத்தைப் பிரித்து தருமாறு கூறி, தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட அண்ணனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தம்பியை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பெருமாயி (62). இவர்களுக்கு பட்டுராஜன் (26), செளந்தர்ராஜன் (24) ஆகிய இரு மகன்கள். சில ஆண்டுகளுக்கு முன் பொன்னுச்சாமி இறந்துவிட்டார்.
இந்நிலையில், மகன்கள் இருவரும் கேரளத்தில் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். சில தினங்களுக்கு முன் இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். இதில், அண்ணன் பட்டுராஜன் தினமும் மது அருந்திவிட்டு வந்து சொத்தை பிரித்துத் தருமாறு தாயிடமும், தம்பியிடமும் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை இரவு மதுபோதையில் வந்த பட்டுராஜன், வீட்டில் தகராறு செய்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிவிட்டாராம். அப்போது, பட்டுராஜன் தலையில் அவரது தம்பி செளந்தர்ராஜன் கருங்கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பட்டுராஜனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வருசநாடு போலீஸார், செளந்தர்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.