போடியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
போடி தென்றல் நகரில் வசித்து வருபவர் கோபிக்கண்ணன் (34). இவரது மனைவி ஜீவாராணி (32). இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கோபிக்கண்ணன் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ஜீவாராணி, தனது கணவர் மீது போடி நீதிமன்றத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
ஜீவாராணி, போடியில் உள்ள தனது தங்கை கார்த்திகாராணி வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று வருகிறார். திங்கள்கிழமை இரவு அங்கு சென்ற கோபிக்கண்ணன், தனது மனைவி ஜீவாராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ஜீவாராணி போடி நகர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கோபிகண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.