கம்பம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் கட்டமைப்பு அமைக்கா விட்டால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என பொதுமக்களுக்கு நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே இந்த கட்டமைப்பு இருந்தால் அவற்றை பராமரிக்கவும், புதியதாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்றால் உடனே ஏற்படுத்தி, 15 நாள்களுக்குள் நிர்வாகத்துக்கு தெரிவிக்கவும், பொதுமக்களுக்கு அறிவிப்பு பிரசுரங்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
இது பற்றி நகராட்சி மேலாளர் முனிராஜ் கூறியது: மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் நீர் மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும், தேவையான நீரை நகராட்சி பகுதியில் உள்ள மக்கள் தாங்களாகவே சேமித்து பாதுகாக்கக்கூடிய நிலை ஏற்படும். புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காவிட்டால் தமிழ்நாடு மாவட்ட, நகராட்சி சட்டம் 1920, பிரிவு 215 ஏ ன்படி குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.