ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூட்டுக்குடிநீர் திட்ட ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் வைகை அணை பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் பிரேம்குமார்(34). இவர் சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி பணிக்கு சென்ற போது, வைகை அணைப் பிரிவில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.