தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வியாழக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போடி, சீனிமுகமது நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (58). இவரது மனைவி செல்வி (49). இவர்கள் தேனியில் இருந்து போடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, பழனிசெட்டிபட்டி பிரதானச் சாலையில் இவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், செல்வி அணிந்திருந்த மூன்றரை பவுன் எடையுள்ள சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலு அளித்த புகாரின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.