தேனி மாவட்டம் சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சரக்கு லாரி கவிழ்ந்ததில் அதன் மேற்கூரையில் பயணம் செய்த 6 கூலித் தொழிலாளிகள் பலத்த காயம் அடைந்தனர்.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியிலுள்ள தனியார் தோட்டத்தில் இருந்த வாழைத்தார்களை மினிலாரியில் ஏற்றிக் கொண்டு சின்னமனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேம்படிக்களம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் லாரியின் மேற்கூரையில் அமர்ந்திருந்த, சின்னமனூர் அய்யனார்புரத்தை சேர்ந்த செந்தில், கே.கே.குளத்தை சேர்ந்த பழனிச்சாமி, 27 ஆவது வார்டைச் சேர்ந்த முத்துஇருளாண்டி,செந்தில் மனைவி கவிதா மற்றும் ஓட்டுநர் ராஜா உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.