தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணை பிளேடால் கீறி, கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்தத் தொழிலாளியை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கருப்பம்மாள் (33). இவரது மகன் உடல் நிலை சரியில்லாததால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மகனின் ரத்தப் பரிசோதனை முடிவை பெறுவதற்காக கருப்பம்மாள் பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தனியார் நிறுவன ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளி முருகன் (42), அவரது மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது முருகன் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து அவரது மனைவியை குத்த முயற்சி செய்துள்ளார். அதனை அங்கிருந்த கருப்பம்மாள் தடுத்துள்ளார். இதில் கருப்பம்மாளுக்கு கையில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கருப்பம்மாளுக்கு அவர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருப்பம்மாள் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகனை கைது செய்தனர்.