தேனி மாவட்டம் போடியில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி கோரிய வழக்கில், தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கையைப் பரிசீலித்து 2 வாரங்களில் முடிவெடுக்க நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
போடியைச் சேர்ந்த சுபாகரன் தாக்கல் செய்த மனு: போடி பழைய பேருந்து நிலையம் அருகே சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிமெண்ட் சிலை 40 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி வ.உ.சி.யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்நிலையில், அந்த சிலை சேதமடைந்துள்ளதால் அதற்கு பதிலாக வெண்கலச்சிலை அமைக்க 2014-இல் வட்டாட்சியர் ஒப்புதல் பெற்று 2015-இல் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்தோம்.
அப்போது, சிலை நிறுவுவதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனக்கூறி சிலையை நிறுவுவதற்கு உத்தமபாளையம் கோட்டாட்சியர் மறுப்புத் தெரிவித்தார்.
சிலை அமைத்து 4 ஆண்டுகளாகியும் அதே இடத்தில் நிறுவ முடியாத நிலை உள்ளது. எனவே வ.உ.சி.யின் சிலையை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கையை 4 வாரங்களில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையைப் பரிசீலித்து ஆணையர் 2 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.