தேனி மாவட்டம், கம்பம் வட்டாரப் பகுதியில் தோட்ட விவசாயத்துக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கம்பம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் பிரிதர்ஷினி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டில் கம்பம் வட்டாரத்துக்கு ரூ.6 கோடி மானியம் சொட்டு நீர்ப் பாசனத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசனம் அமைக்காத விவசாயிகள், 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு 100 சதவீத மானியமும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே, சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவு பெற்ற விவசாயிகளும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சிறு, குறு விவசாயிகள் வட்டாட்சியரிடமிருந்து சான்று பெற்று, அதனுடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம் 2, வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன், கம்பம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.