தேனி மாவட்டம் கம்பத்தில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 3 நாள்கள் கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெற்றது. இதில் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ கம்பராயர், ஸ்ரீ வேணுகோபாலனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் கோயில் வளாகத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை, கேடயத்தை போராசிரியர் எஸ்.பாலகிருஷ்ணன், மருத்துவர் பி.வெங்கட்ராமன் ஆகியோர் வழங்கினர். விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். பின்னர் வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் போட்டி அதிகாலை வரை நடைபெற்றது. வெற்றி பெற்ற இளைஞர் குழுவினருக்கு விழா கமிட்டியினர் பரிசுகளை வழங்கினர்.