ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை உறவினரின் இறுதிச் சடங்குக்காக வைகை அணைக்குச் சென்ற நெசவு தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி கீழப்புதுத்தெருவைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி முனியாண்டி திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இறுதிச் சடங்கு வேலையில் ஈடுபட்டனர். அதன்படி, இறந்தவரின் உறவினர்கள் நீர்மாலை எடுப்பதற்காக வைகை அணைக்குச் சென்றனர். வைகை அணையின் முன்பாக மதுரைக்கு குடிநீர் எடுக்கும் தடுப்பணைப் பகுதியில் தண்ணீர் எடுத்தபோது, சக்கம்பட்டியை சேர்ந்த அம்மாமுத்து (52) எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதனைக்கண்ட மற்ற உறவினர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து இறந்தவரின் உடலை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு முன்பே உறவினர்இறந்த அம்மமுத்துவின் உடலை மீட்டனர்.
இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வைகை அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு சென்றபோது மற்றொருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சக்கம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.