ஆண்டிபட்டி நகரில் செயல்பட்டு வரும் காய்கறி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியுற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பகுதியில் காய்கறி வாரச்சந்தை அமைந்துள்ளது. திங்கள்கிழமைதோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும் இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சந்தை வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை, குப்பைக் கழிவுகளை முறைப்படி அகற்றுவதில்லை, சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது என அடிப்படை வசதிகள் இல்லை என புகார்கள் கூறப்படுகின்றன.
மேலும் பிக்பாக்கெட் திருடர்கள் நடமாட்டம் மின் விளக்கு வசதி இல்லாதது போன்ற பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே இந்த சந்தையில் போதுமான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.