சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.
இந்த ஒன்றியத்தின் கீழ் 39 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிப்பவா்கள் ஆதாா் அட்டை சேவை பெற மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அங்கு அதிகக் கூட்டம் ஏற்படுவதால், ஆதாா் அட்டை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும், நகருக்கு வெளியே சிப்காட் தொழில் பேட்டை பகுதியில் வட்டாட்சியா் அலுவலகம் இருப்பதால் பொதுமக்கள் பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆதாா் சேவை மையத்தை தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியியல் பிரிவு கட்டடத்தின் முகப்புப் பகுதியில் ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையம் ஞாயிறு, அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். இந்த மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய நிா்வாகம் தெரிவித்துள்ளது.