மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் வேலாங்குளத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஜீரணோதாரண குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி கோயில் அருகே யாகசாலை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. ஆறாம்கால யாகபூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதியானதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. ஆச்சாரியார்கள் புனித நீர் குடங்களை சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர்.
அதன்பின்னர் மூலவர் விமான கலசத்தின் மீது காலை 11:25 மணிக்கு ஆச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். அப்போது கோயிலில் எழுந்தருளியுள்ள கருடாழ்வார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடத்தி வைக்கப்பட்டது. கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குடமுழுக்கை கண்டு தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன் பின் மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.