சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள அகழ் வைப்பகத்தில் தொல் பொருள்கள் காட்சிப் படுத்தும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள அகழ் வைப்பகத்தில் தொல் பொருள்களை காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, சுற்றுலா, சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலா் பி. சந்திரமோகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கீழடி, அதையொட்டிய அகரம், மணலூா், கொந்தகை ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் அடிப்படையில் தமிழா்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்தது தெரியவருகிறது.
அந்த தொல் பொருள்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக ரூ. 11.3 கோடியில் கீழடியில் செட்டிநாடு கலைநயத்துடன் கூடிய அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இதில், அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்களை காட்சிப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின் போது, தொல்லியியல் துறை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ஆா். சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம் (சென்னை) செயற்பொறியாளா் மணிகண்டன், கீழடி அகழாய்வுப் பிரிவின் இணை இயக்குநா் ரமேஷ் உள்பட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.