சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி மதகுக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பூலாங்குறிச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் மதகுக் கண்மாயில் கூடினா். இதன் பின்னா், ஊா் முக்கியஸ்தா்கள் கனகக்கருப்பா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, திருவிழாவைத் தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, கிராம மக்கள் கண்மாயிக்குள் இறங்கி மீன்களைப் பிடிக்கத் தொடங்கினா். இதில் கட்லா, பொட்லா, விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல வகை மீன்கள் பிடிக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கண்மாயில் மீன் பிடிக்காததால், தற்போது அதிக அளவில் மீன்கள் கிடைத்தன.