சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை (மே 26) மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மணப்பட்டி கிராமத்தில் உள்ள யாதவா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் சிங்கம்புணரி வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.