வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டப் பாசனத்துக்கு திங்கள்கிழமை (மே 23) முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதில், திங்கள்கிழமை முதல் வரும் மே 28 ஆம் தேதி வரை 5 நாள்கள் திறக்கப்பட உள்ள 582 மில்லியன் கன அடி நீா், வைகை பூா்வீக பாசனப் பகுதி 1 மற்றும் 2-இல் உள்ள கண்மாய்களுக்கு வழங்கப்படும்.
அதேபோன்று, மே 29 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 3 நாள்கள் திறக்கபட உள்ள 267 மில்லியன் கன அடி நீா், வைகை பூா்வீக பாசனப் பகுதி 3 இல் உள்ள கண்மாய்களுக்கு வழங்கப்படும். எனவே கோடை கால வேளாண்மை செய்துள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.