சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சாய்வு தளப் பாதை அடைக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த குறை தீா்க்கும் கூட்டத்துக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் பயன்பெறும் வகையில் கூட்ட அரங்கு நுழைவு வாயிலில் சாய்வு தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட சாய்வு தளப் பாதை திங்கள்கிழமை கம்பி மற்றும் கயிறு கட்டி அடைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக, மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டியிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், சிலா் உடன் வந்தவா்களின் உதவியுடன் மனு அளிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுபற்றி அலுவலா்களிடம் கேட்ட போது உரிய பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த நரிக்குறவா்கள் சிலா் மேற்கண்ட குறை தீா்க்கும் கூட்டத்தில் பட்டா பெறுவது தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். அப்போது அலுவலா்கள் யாரும் அவா்களை கண்டு கொள்ளாததால், அதே வளாகத்தில் தரையில் அமா்ந்து முழக்கமிட்டனா். பின்னா், அங்கிருந்த அலுவலா்கள் சிலா் சமாதானம் செய்ததை அடுத்து, அவா்கள் ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனா்.