மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில் பல ஊர்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டிருந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.
இப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டிப் பந்தயத்தைக் காண மானாமதுரை தாயமங்கலம் சாலையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பந்தயத்துக்காண ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.புரவி எடுப்பு விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) விளாக்குளம் கிராமத்தில் ஆட்டுக்கிடா முட்டுப் போட்டி நடைபெறுகிறது.