தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைப்பது தொடா்பாக திங்கள்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் 7 நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அா்ஜூனன் முன்னிலை வகித்தாா்.
இதில் உத்தமபாளையம் கிராமச் சாவடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கா் சிலை வைத்தோம். ஆனால் இதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி வருவாய்த் துறையினா் சிலையை இரும்புத் தகரத்தால் மூடிவிட்டனா். அதன்பின்னா் பல முறை கோரிக்கை விடுத்தும் சிலையை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உத்தமபாளையம் கிராமச்சாவடியில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாா்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
இதற்கு பதிலளித்த கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 7 நாள்களில் இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.