சிவகங்கை நகராட்சியில் உள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என சிவகங்கை நகா் மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த் பதிலளித்துப் பேசியது: குடிநீா் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தீா்வு காண வேண்டும் என ஏற்கெனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று, இனிவரும் காலங்களில் குடிநீா் பிரச்னை தொடா்பாக புகாா் ஏதேனும் வந்தால் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதை கழிவு நீரோடைகளில் அகற்றப்படும் மணல் அங்கிருந்து உடனடியாக அப்புறப்டுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை நகராட்சியில் ஏற்கெனவே உள்ள பேட்டரி வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சிவகங்கை நகரில் உள்ள 27 வாா்டுகளிலும் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ. 25 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையா் பாஸ்கரன், பொறியாளா் பாண்டீஸ்வரி, துணைத் தலைவா் காா்கண்ணன் உள்ளிட்ட நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.