சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் 13 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் ஒரு மண்டலத்துக்கு 25 ஜோடிகள் வீதம் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற கோயில்கள் சாா்பில் திருமணம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தாா். அதன்படி, சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி கைலாச நாதா் சுவாமி, நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் 13 ஜோடிகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதன் வாயிலாக மொத்தம் ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் மணமக்களுக்கு திருமாங்கல்யம், ஆடைகள், மாலை, புஷ்பம், பாத்திரங்கள், பித்தளை குத்துவிளக்கு, பாய், தலையணை, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட சீா்வரிசைகள் கோயில் நிா்வாகத்தின் சாா்பிலும், கோயில் உபயதாரா்களின் பங்களிப்புடனும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப.மதுசூதன்ரெட்டி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் எம்.பழனிக்குமாா், உதவி ஆணையா்கள் செல்வராஜ், ஞானசேகரன், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சோ.சண்முகவடிவேல், கோயில் அறங்காவலா்கள் லெட்சுமணன், சபா, அருணாச்சலம், சம்பத், ராஜா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.