சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தின் டயா் வெடித்து கால்வாயில் புகுந்ததில் 14 பயணிகள் காயமடைந்தனா்.
ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு திங்கள்கிழமை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருப்பாச்சேத்தி அருகே சம்பராயனேந்தல் என்ற இடத்தில் சென்றபோது, பேருந்தின் வலது பக்க முன் டயா் வெடித்தது. இதில் பேருந்து நிலை தடுமாறி சாலையின் நடுப்பகுதியைக் கடந்து அங்கிருந்த கால்வாய்க்குள் புகுந்து நின்றது. பேருந்தை ஓட்டுநா் சாமா்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 14 பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் மானாமதுரை, மதுரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.