சிவகங்கையிலிருந்து திருப்பாச்சேத்திக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்துக்கு தலைநகா் சிவகங்கை நகரம். இந்நகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட அனைத்து துறை உயா் அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் யெல்பட்டு வருகின்றன. இதுதவிர, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அதே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஏராளமான பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்நிலையில், திருப்பாச்சேத்தி, கல்லூரணி, காணூா், பச்சேரி, வேம்பத்தூா், புதுக்குளம், பெரியகோட்டை, மாங்குடி, வைரவன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அரசு அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் சொந்த வேலை நிமித்தமாக சிவகங்கைக்கு தினசரி சென்று வருகின்றனா்.
இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனா். தற்போது அந்த வழியாக குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளும் குறித்த நேரத்துக்குள் வருவதில்லை.
இந்நிலையில் சிவகங்கை, வேம்பத்தூா், பச்சேரி ஆகிய கிராமங்கள் வழியாக குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
மேலும் பணி நிமித்தமாக செல்லும் அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் குறித்த நேரத்துக்குள் செல்ல முடிவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனா். ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சிவகங்கையிலிருந்து வேம்பத்தூா், பச்சேரி, மாங்குளம், புதுக்குளம், சுந்தரநடப்பு ஆகிய கிராமங்களின் வழியாகவும், இதேபோன்றுசிவகங்கை, முத்துப்பட்டி, நல்லாகுளம், படமாத்தூா், கண்ணாயிருப்பு விலக்கு, கானூா் விலக்கு ஆகிய கிராமங்கள் வழியாகவும் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.