சிவகங்கை மாவட்டத்தில் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சாா்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு ( தொழிற் கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.