மானாமதுரையில் பழைய மதுரை- ராமேஸ்வரம் சாலையில் மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள ஸ்ரீகொரட்டி கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் புதிதாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரட்டி கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் புனித நீர் கலசங்களை வைத்து யாக பூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோயிலைச் சுற்றி மேளதாளத்துடன் வலம் வந்தனர்.
இதையும் படிக்க- தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது: பிரதமர்
பின்னர் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகருக்கும் அதன் பின்னர் கொரட்டி கருப்பண்ணசாமிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசித்தனர். பின்னர் விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து கொரட்டி கருப்பணசாமிக்கு வெள்ளி கவசம் அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.