மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடியிருப்புகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மழைத் தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரையில் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள இந்த வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருள்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும் அரசு துறையினர் யாரும் இப்பகுதியை நேரில் வந்து பார்க்கவில்லை என்றும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதிகளைச் சேர்ந்தபெண்கள் உள்ளிட்டோர் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து க்ஷ முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த வட்டாட்சியர் தமிழரசனிடம் தங்களது குடியிருப்பு பகுதியில் மழை தண்ணீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினர். மழைத் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் அது தொடர்பான கோரிக்கை மனுவும் வட்டாட்சியரிடம கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் தமிழரசன் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மழைத் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.