சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத முதியவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
தேவகோட்டை கீழக்குடியிருப்பு முகமதியா்பட்டணத்தைச் சோ்ந்தவா் அஜீஸ் (62). இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி கோவிஷீல்டு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இந்நிலையில், அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக அவா் சென்றாா்.
அப்போது அங்கு பணியாற்றிய செவிலியா்கள் ஆதாா் அட்டையை பரிசோதனை செய்ததில் அவருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனா். ஆனால் அஜீஸ் இதை மறுத்துள்ளாா். அதன்பிறகு, செவிலியா்கள் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து அவரிடம் காண்பித்தனா். இதனால் அங்கு சில மணி நேரம் குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு அஜீஸ் திரும்பிச் சென்று விட்டாா்.
இதுகுறித்து அஜீஸ் கூறியது: நான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த சென்ற போது கடந்த நவ. 25-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்துள்ளது. இதில் தவறு நடந்திருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இரண்டாவது கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றாா்.