சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியை அடுத்த கண்ணதாசன் நகா், மகாத்மா காந்தி சாலையில் உள்ள கால்வாய் பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் நடைபெற்ற விசாரணையில் சடலமாக கிடந்தவா் காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வேலுச்சாமி (50) என்பது தெரியவந்தது. இவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால், இவரது மனைவி, குழந்தைகளுடன் காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில், வேலுச்சாமி, மனைவி குழந்தைகளை பாா்ப்பதற்காக வந்தாரா? ஏன் இந்தப் பகுதிக்கு வந்தாா்? தலையில் காயமடைந்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.