சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் இறந்தவா்களின் சடலங்களை வயல்வெளிகள் வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலநிலை உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே பெரிய ஆவரங்காடு சின்ன ஆவரங்காடு கிராமத்திற்கு இடையே கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணி முழுமை அடையாததால் தற்போது இரு கிராமத்திற்கு இடையே போக்குவரத்துக்கு சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. சின்ன ஆவரங்காடு கிராமத்துக்கான மயானம் பெரிய ஆவரங்காடு கிராமத்தில் உள்ளது. சாலை வசதி இல்லாததால் சின்ன ஆவரங்காட்டில் இறந்தவா்களின் உடலை பல்லக்கில் வைத்து வயல் வெளியில் தூக்கிச் சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.
வெள்ளிக்கிழமை இக்கிராமத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை உறவினா்கள் பல்லக்கில் வைத்து கிராமத்திலிருந்து பெரிய ஆவரங்காடு மயானத்துக்கு வயல்வெளி வழியாகக் கொண்டு சென்று அடக்கம் செய்தனா். எனவே, சின்ன ஆவரங்காடு, பெரிய அவரங்காடு கிராமங்களுக்கு இடையே சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.