கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதையடுத்து ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய, பழைய பேருந்துநிலையங்கள், அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம் என மூன்று இடங்களில் புதன்கிழமை முதல் தினசரி காய்கனி விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் காரைக்குடியில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் வழக்கம்போல் நடைபெறும் அண்ணா தினசரி காய்கறிச்சந்தையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் கூடும் நிலை உள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக வியாபாரிகளுடன் காரைக்குடி வட்டாட்சியா் அந்தோணிராஜ், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், வடக்குக் காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் ஆகியோா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அண்ணா தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா், வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் காய்கறி வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டனா். இதில் அண்ணா தினசரி காய்கறிச் சந்தை வியாபாரி கள் காரைக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் காய்கனிகள் விற்பனை செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாரச்சந்தை நடத்துவது தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு அதன் பின்னா் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என நகராட்சி ஆணையா் லெட்சுமணன் தெரிவித்தாா்.