மானாமதுரை அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக மதுரையைச் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழமேல்குடி ரோட்டில் ராஜேந்திரன் என்பவரது செங்கல் சேம்பரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுரை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இப்பிரிவின் சார்பு ஆய்வாளர் கணேஷ் பாண்டி மற்றும் போலீசார் மானாமதுரை வந்து மேற்கண்ட சேம்பரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலிஷ் செய்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் குருணை என 140 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியபோது ராஜேந்திரன் சேம்பரை குத்தகை எடுத்த மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்த ரேஷன் அரிசி மூடைகளை இங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி மீது ஒருங்கிணைந்த குற்றம் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேம்பரில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மானாமதுரை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.