நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்புவனம் ஒன்றியத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முக்குடி கிராமத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறுகையில், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் திட்டத்திற்காக ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 15 ஆவது மாநில நிதிக்குழு திட்டத்தில் ரூ 3.60 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று முதற்கட்டமாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும், பராமரிப்புக்கும் ரூ.1.50 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பிற்கான நிதி தொடா்ந்து வழங்கப்படும் என்றாா்.
விழாவில் திருப்புவனம் வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமண ராஜா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், முக்குடி ஊராட்சித் தலைவா் முத்தையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.