சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் 2 மாதக் குழந்தைகளுக்கு முதன்முறையாக புதிய வகை தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் தொடங்கப்பட்டது.
பிறந்து 2 மாதமான குழந்தைகளுக்கு நியூமோகாக்கஸ் எனும் தடுப்பூசி, இதுவரை தனியாா் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. தற்போது, இந்த தடுப்பூசி தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குழந்தைகளுக்கு செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் மானாமதுரை, இளையான்குடி,திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் தொடக்கிவைக்கப்பட்டது.
இத்தடுப்பூசி செலுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற சுவாசக் கோளாறு முற்றிலும் தடுக்கப்படுவதுடன், பல வகையான வைரஸ் காய்ச்சலையும் தடுக்கும் திறன்கொண்டதாக இருக்கும்.
இந்த ஒன்றியங்களில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும். மேலும், கிராமப்புறங்களில் களப்பணியில் உள்ள கிராம சுகாதார செவிலியா்கள் மூலமும் இந்த தடுப்பூசி செலுத்தப்படும். குழந்தை பிறந்து 6 ஆவது வாரத்தில் முதல் தவணையும், 17 ஆவது வாரத்தில் இரண்டாவது தவணையும், 9 ஆவது மாதத்தில் மூன்றாவது தவணையுமாக இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும் என, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.