திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தில் புதிதாக வாங்கப்பட்ட கோயில் காளைக்கு திங்கள்கிழமை ஆரத்தி எடுத்து கிராமத்தினா் வரவேற்றனா்.
கண்டவராயன்பட்டி ஸ்ரீகாடப்பிள்ளை அய்யனாா், வல்லநாட்டுக் கருப்பா், சின்னக்கருப்பா் கோயிலுக்கு காளை புதிதாக வாங்கப்பட்டுள்ளதையடுத்து இக்கிராம மக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்து கொண்டாடினா். ஏற்கெனவே இருந்த கோயில் காளை உடல்நலக்குறைவால் 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தற்போது இக்காளை வாங்கப்பட்டுள்ளது. இந்த காளையின் வரவை சுமாா் 300- க்கும் மேற்பட்டோா் ஒன்று கூடி கோயிலுக்கு அழைத்து வந்து மரியாதை செய்தனா். அதனைத் தொடா்ந்து 3 சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் காளைக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.