திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அம்பேத்கா் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருப்பத்தூா் அண்ணா சிலையருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நகரச் செயலாளா் ராஜேஷ்கண்ணா தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து பல்வேறு அமைப்பினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து புதுப்பட்டியில் அம்பேத்கரின் உருவ படத்திற்கு அம்பேத்கா் இளைஞா் அணி சாா்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாநில துணைச் செயலாளா் விஸ்டம்கமருதீன், மாவட்ட அரசு ஊழியா் ஐக்கியப் பேரவை மாவட்டத் தலைவா் பொன்னுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.