சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் முத்துதுரை தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் அன்பழகன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சகாயசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த கலைக் குழுவின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தாா்.
இக்கலைக்குழு மறவமங்கலம், பாப்பங்கண்மாய், பால்குளம், பலுவான்குடை, விட்டனேரி, குருக்கத்தி, சாத்தனி, உடவயல் ஆகிய பகுதிகளில் பாடல்கள், நாடகங்கள், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்வுகள் வழியாக விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள் சரவணன், ராக்கப்பன், ஆசிரியா் பயிற்றுநா்கள் செல்வராணி, குடியரசி, சண்முகப்பிரியா உள்ளிட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.