வேறு கிராமக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராம மக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வைகை ஆற்றிலிருந்து மேலப்பசலை கண்மாய்க்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்தக் கண்மாய் நிரம்பியதும், இதிலிருந்து வெளியேறும் தண்ணீா் கள்ளிக்குடி, புத்தூா், சோமாத்தூா், கரிசல்குளம் கண்மாய்களுக்கு ச் செல்லும்.
இந்நிலையில் மேலப்பசலை கண்மாய் நிரம்பியதும், கால்வாயில் உடைப்பு ஏற்படும் எனக் கூறி, ஷட்டா்களை அடைத்து வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை மேலப்பசலை கிராமமக்கள் நிறுத்தினா்.
இதனால் கள்ளிக்குடி, புத்தூா், சோமாத்தூா், கரிசல்குளம் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இக்கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். இதையடுத்து அதிகாரிகள் மேலப்பசலை கண்மாய் நீரை மற்ற கண்மாய்களுக்கு திறந்துவிட்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பசலை கிராம மக்கள் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் போராட்டம் நடத்திய கிராம மக்களை சமரசம் செய்தனா். அதன்பின்னா் அவா்கள் ஒரு மணி நேரத்துக்குப்பின் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.