வைகையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நிரம்பியிருந்த செய்களத்தூர் கண்மாய் கரையை உடைத்து அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த செய்களத்தூர் கிராமத்தில் தொடர் மழையால் ஏற்கனவே கண்மாய் நிரம்பியிருந்தது. இந்நிலையில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள உப்பாற்றில் வந்த வெள்ளத்தால் இந்த ஆற்றின் கரைகள் உடைந்ததால் செய்களத்தூர் கிராமத்துக்குள்ளும் இங்குள்ள பெரிய கண்மாய்க்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
இதனால் ஏற்கெனவே நிரம்பியிருந்த இந்த கண்மாய் தண்ணீர் வரத்து தாங்கமுடியாமல் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி உப்பாற்றின் உடைந்த கரைகள் மணல் மூடைகளை கொண்டு சீரமைக்கப்பட்டது. இதன்மூலம் உப்பாற்றுத் தண்ணீர் செய்களத்தூருக்குள் புகுந்தது நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க | ‘விரைவில் நிலை மாறும், தலை நிமிரும்’: சசிகலா அறிக்கை
இந்நிலையில் வைகை அணையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வைகையில் வரும் வெள்ளம் உப்பாற்றில் எதிர்திசையில் திரும்பி சீரமைக்கப்பட்ட கரைகளை உடைத்துக் கொண்டு மீண்டும் செய்களத்தூருக்குள் புகுந்துள்ளது. இதனால் இங்குள்ள பெரிய கண்மாய் உடைய வாய்ப்பு ஏற்பட்டு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் செய்களத்தூர் இதன் அருகேயுள்ள கள்ளர்வலசை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | திருநெல்வேலியில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
இதற்கிடையில் பெரிய கண்மாய் உடைந்து செய்களத்தூர்,கள்ளர் வலசை கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து கிராம மக்கள் ஒத்துழைப்புடன் பெரிய கண்மாயில் கழுங்கு நீர் வெளியேறும் இடத்தின் அருகே கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்த தண்ணீர் செய்களத்தூர் சின்ன கண்மாய்க்கு பாய்ந்து வருகிறது. தொடர்ந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இருக்கும் பட்சத்தில் பல இடங்களில் சேதமடைந்துள்ள கண்மாய் கரைகள் உடைந்து பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கும் இருக்கும் என அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கருதுகின்றனர்.