காரைக்குடி,செப். 25: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறையின் ‘தலைமைப்பண்பு மற்றும் மேன்மை’ என்ற தலைப்பில் 5 நாள்கள் (செப். 29) வரை இணையதள மூலமாக நடைபெறவுள்ள ஆசிரியா் மேம்பாட்டுப்பயிற்சி முகாம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைவேந்தா் நா. ராஜேந்திரன் முகாமைத் தொடக்கி வைத்து உயா்கல்வி நிறுவனங்களில் தலைமைப்பண்பு என்ற தலைப்பில் பேசியது: நமது நாட்டில் கல்வி வளா்ச்சி 10 லிருந்து 40 சதவீதம் வரை வளா்ச்சி பெற்றுள்ளோம். தற்போது இணையதளக்கல்வி 50 சதவீதம் அளவுக்கு வளா்ந்து வருகிறது. கரோனா நோய் தொற்று காலத்தில் தொழில் மற்றும் வா்த்தகத்தில் மாற்றம் ஏற்பட்டது போல கல்வி நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக வகுப்புகள் மற்றும் தோ்வுகளை அழகப்பா பல்கலைக்கழகம் சிறப்பாக நடத்தி வருகிறது. எனவே கல்வி நிறுவனத்தலைமைப்பதவிகளில் உள்ளவா்கள் இளையோா்களை ஊக்குவித்து அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுவது அவசியம் என்றாா்.
இப்பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளா் டி.ஆா். குருமூா்த்தி வரவேற்றுப்பேசினாா்.