சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நகர் கூட்டுறவு பண்டகசாலை மூலம் நகரும் நியாயவிலைக் கடை திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன் வரவேற்றார். தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் விழாவில் கலந்து கொண்டு நகரும் நியாயவிலைக் கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசும்போது நீண்ட தொலைவிலிருந்து மக்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து பொருள்கள் வாங்க சிரமப்படும் நிலை உள்ளது.
இதனால் தமிழக அரசால் மக்கள் இருக்கும் இடத்துக்கே வந்து ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் நகரும் நியாயவிலைக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இவ் விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.சி.மாரிமுத்து, நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன், நகர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கே.முனியசாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவ சிவ ஸ்ரீதரன்,நகர்ச் செயலாளர் விஜி.போஸ், நிர்வாகிகள் நமச்சிவாயம், நாகுநரசிங்கம் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.