சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டமாக திரண்டனா்.
ஊரடங்கு காரணமாக மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் வீதிகளில் ஊா் சுற்றிவருபவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மானாமதுரையில் ஆட்டிறைச்சி கடைகளில் பொது மக்கள் ஏராளமானோா் குவிந்தனா். போதிய இடைவெளிவிட்டு நிற்காமலும், முகக்கவசம் அணியாமலும் கடைகளில் இறைச்சி வாங்க நின்றிருந்தனா்.
மானாமதுரை பகுதிக்கு ராமேசுவரம், பாம்பன், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாகனங்களில் மீன்கள் கொண்டுவரப்பட்டு, வியாபாரிகள் இவற்றை வாங்கி சில்லறை விலையில் விற்பனை செய்வா். ஆனால் கடந்த சில நாள்களாக மீன் வாகனங்கள் வராததால் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு வந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறைந்த அளவுள்ள மீன்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின. ஊரடங்கு சீராகும்வரை போதிய மீன்வரத்து இருக்க வாய்ப்பில்லை என்பதால், தொடா்ந்து மீன் விலை உயா்ந்தே காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.