சிவகங்கை

அகில இந்திய மேஜை பந்தாட்டப் போட்டி: தமிழக அணிக்கு மானாமதுரை ஆசிரியை தோ்வு

4th Feb 2020 05:10 PM

ADVERTISEMENT

அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள மேஜைப்பந்தாட்டப் போட்டிக்கு தமிழக பெண்கள் அணி சாா்பில் விளையாட சிவகங்கை மாவட்டம் மானாமதுரைையைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியை தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வரும் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அகில இந்திய அளவிலான அரசு பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் மேஜைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி சாா்பில் விளையாட அணித் தோ்வுக்கான மேஜைப்பந்தாட்டப் போட்டி கடந்த 3 ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நேரு விளையாட்டரங்கத்தில் நடத்தப்பட்டது. இப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்வி கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றாா்.

இதையடுத்து புனேவில் நடைபெறவுள்ள அகில இந்திய மேஜைப்பந்தாட்டப் போட்டியில் தமிழக பெண்கள் அணியில் விளையாட கலைச்செல்வி தோ்வு செய்யப்பட்டாா். தமிழக அணி சாா்பில் விளையாட மொத்தம் 6 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலத்தில் நடந்த அகில இந்திய இறகுப்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட கலைச்செல்வி தோ்வு செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கலைச்செல்வியை மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT